எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை டெபாசிட் இழக்கச் செய்வோம்: திமுக வேட்பாளர் சம்பத்குமார் பேட்டி

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை டெபாசிட் இழக்கச் செய்வோம் என, திமுக வேட்பாளர் சம்பத்குமார் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், அதிமுக சார்பாக மீண்டும் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, திமுக மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் சம்பத்குமார், நேற்று (மார்ச் 17) கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை தொண்டர்கள் புடைசூழ திமுக வேட்பாளர் சம்பத்குமார் ஊர்வலம் சென்றார்.

தேர்தல் அலுவலர் தனலிங்கத்திடம் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி டெபாசிட் இழப்பார் எனவும், திமுக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பத்குமார் பேசுகையில், "திமுக தலைவரின் வழிகாட்டுதலின்படி எடப்பாடி தொகுதி மக்களின் பேராதரவுடன் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறேன். கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமியை டெபாசிட் இழக்கச் செய்வோம். எங்களுக்கு மக்கள் துணை இருக்கின்றனர். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். அவர் பணத்தை நம்பி இருக்கிறார். கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE