சிவகங்கையில் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு சீட் மறுக்கப்பட்டதைக் கண்டித்து ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கையில் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு சீட் மறுக்கப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை தொகுதி எம்எல்ஏவாகவும், கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஜி.பாஸ்கரன்.

மேலும் தொகுதியில் தன் மீது அதிருப்தி இல்லாததால் இம்முறையும் தனக்கு எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சி கூட்டங்களை நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட அதிமுகவின் இரண்டாம் கட்ட பட்டியலில் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் தேவகோட்டையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டது.

இதனால் கொதிப்படைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் நேற்று சிவகங்கை சிவன் கோயிலில் இருந்து, ‘ வெளியூரைச் சேர்ந்த செந்தில்நாதனை மாற்றி உள்ளூரைச் சேர்ந்த அமைச்சருக்கு மீண்டும் சீட் வழங்கு,’ என கோஷமிட்டபடியே பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.

மேலும் எம்ஜிஆர் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமராக்கியைச் சேர்ந்த பாலா உட்பட 6 பேர் திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை சமரசப்படுத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இந்த ஊர்வலத்தில் அதிமுக கட்சியினர் மட்டுமின்றி, கிராமமக்களுக்கும் ஏராளமானோர் பங்கேற்றதால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE