சசிகலாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை; எடப்பாடி மீண்டும் முதல்வராவார்: பாஜகவின் அண்ணாமலை பேட்டி

By செய்திப்பிரிவு

அதிமுகவுடன் கைகோர்க்க சசிகலா, டிடிவி தினகரனுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அதிமுக பாஜக தொகுதிப் பங்கீடு குறித்து நேற்று பாஜக தலைமையிடம் கமலாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் எவ்வித இழுபறியும் இல்லை. அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது. பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அப்படியிருக்க அதிருப்தி, இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக வெற்றிபெற தேஜகூ எல்லாவிதமான ஆதரவையும் கொடுக்கும்.

அதிமுகவுடன் இணைய அமமுகவுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. யாரும், யாருக்கும் அழுத்தம் கொடுக்க முடியாது. இது ஜனநாயக நாடு. மக்கள் தான் ஜனநாயகத்துக்கு சொந்தக்காரர்கள்" என்றார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் பாஜகவுக்கே ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.,க்களை அனுப்புவோம் என பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE