வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான எண்ணூர் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 22 பேர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 22 பேரைக் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் கைதான 22 பேரும், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்குவதற்காக, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.