தூத்துக்குடியில் 16 மாதங்களுக்குப் பிறகு நடந்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் 16 மாதங்களுக்குப் பிறகு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.செந்தில்ராஜ் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் விஜயராகவன், வயோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த 16 மாதங்களுக்கு பிறகு இன்று மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததால், மீனவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தருவைகுளத்தைச் சேர்ந்த அனிட்டன், மகாராஜன், தங்கத்தாய் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர். அவர்கள் பேசும்போது, தருவைகுளம் பகுதி மிகப்பெரிய மீனவ கிராமம் ஆகும். தருவைகுளம் பகுதி மீனவர்களும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மணப்பாடு கயஸ் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்க மீன்பிடி சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தையும் அதனடிப்படையில் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளையும் முறையாக அமல்படுத்த வேண்டும்.

விசைப்படகுகளின் அத்துமீறலால் நாட்டுப்படகு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் மீன்வளத் துறையினர் சரிவர செயல்படாமல் உள்ளனர். அனைத்து விசைப் படகுகளையும் விதிமுறைப்படி முறையாக பதிவு செய்த பிறகே தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

புன்னக்காயலைச் சேர்ந்த அவங்காரம் பேசும்போது, தாமிரபரணி ஆற்றில் மழை வெள்ளம் வரும்போது புன்னக்காயல் பகுதியில் வீடுகளை மழை நீர் சூழ்ந்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் ஆற்றில் இருந்து ஊருக்குள் தண்ணீர் வருவதை தடுக்கும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், என்றார் அவர்.

பெரியதாழையை சேர்ந்த ஜெயசீலன் பேசும்போது, பெரியதாழை கடல் பகுதியில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் இரவு நேரங்களில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விசைப்படகு தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த சுஜித் பேசும்போது, மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ உதவி மையம் அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி, தொழிலாளர்கள் ஓய்வெடுக்க ஓய்வுக்கூடம், தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பேசும் போது, மீனவர்கள் நல வாரியம் முறையாக செயல்படவில்லை குறிப்பாக மீனவர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதனை சரி செய்ய வேண்டும். கடல்வளம் சமீபகாலமாக அழிந்து வருகிறது. பவளப்பாறை அலையாத்தி காடுகள் அழிவதால் மீன் வளம் குறைந்து வருகிறது. அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

மேலும் சோழபுரத்தை சேர்ந்த பட்டதாரி ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சோதபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் முத்துவிநாயகம் பேசும்போது, நான் புதிதாக விசைப்படகு வாங்கி தொழில் செய்து வருகிறேன். ஆனால் தருவைகுளம், திரேஸ்புரம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ஆகிய இடங்களில் எனது படகை நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் எனது படகை அனாதையாக தாளமுத்துநகர் அருகே நடுக்கடலில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. நான் மீன் பிடிக்க செல்லும் போது அதற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். ஆகையால் எனது படகை ஏதேனும் ஒரு மீன்பிடி தளத்தில் நிறுத்துவதற்கு உரிய அனுமதி பெற்று தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

மேலும் ஆட்சியர் பேசும்போது, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சியில் மீனவர் சமுதாயம் பெரும் பங்காற்றி வருகிறது . மீனவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியதாழையில் ரூ.25 கோடியிலும், ஆலந்தழையில் ரூ.50 கோடிசெலவிலும் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது அடுத்த வாரம் பணிகள் தொடங்கப்படும். கீழவைப்பார் இல் ரூ 16 கோடி செலவில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிக்கு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். கூறினார்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE