காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியது.

காஞ்சி மாவட்ட அரசு மருத்வமனையில் பொது சுகாதாரத் துறை சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசிபோடும் பணிகள் நேற்று தொடங்கியது. இப்பணிகளை காஞ்சி ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். திருப்புட்குழி மற்றும் மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த முகாம் நேற்று தொடங்கியது.

இந்த 3 முகாம்களிலும் சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் ஜீவா, துணை இயக்குநர் பழனி முன்னிலையில் 300 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

செங்கை மாவட்டத்தில் அரசுமருத்துவமனை, தாம்பரம் அரசுமருத்துவமனை உட்பட 6 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. செங்கை அரசு மருத்துவமனையில் இப்பணிகளை செங்கை ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், செங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தி மலர், சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியா ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி, வெள்ளியூர் மற்றும் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருத்தணி அரசு மருத்துவமனை, பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை மற்றும் நேமம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 6 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு, கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

அமைச்சர் ஆய்வு

இம்முகாமை ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, எஸ்பி அரவிந்தன், மாநில மருத்துவ கண்காணிப்பு அலுவலர் சுரேந்திரன், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி வத்சவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE