ஆரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஊத்துக்கோட்டை தற்காலிக தரைப்பாலம்

ஆந்திர மாநிலம், நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆந்திர பகுதியில் உள்ளது பிச்சாட்டூர் நீர்த்தேக்கம். இந்தநீர்த்தேக்கம், கடந்த நவம்பர் மாதம்பெய்த கன மழையால் நிரம்பியது.இதனால், உபரி நீர் திறக்கப்பட்டது. அதனால், கடந்த நவம்பர் 26-ம் தேதி ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊத்துக்கோட்டை தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

எனவே, திருவள்ளூரிலிருந்து, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர பகுதிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால், ஊத்துக்கோட்டையை ஒட்டியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின்சிரமத்தை போக்கும் வகையில், ஆரணி ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறையினர், புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைத்தனர். அந்த தரைப்பாலத்தில் இலகுரக வாகன போக்குவரத்து கடந்த டிசம்பர் 25-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையாலும், பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 300 கன அடிஉபரிநீர் திறக்கப்பட்டு வருவதாலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரணி ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள், இரும்பு படிக்கட்டுகள் மூலம் ஆரணி ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுவரும் உயர் மட்ட பாலத்தில் ஏறி, ஆரணி ஆற்றை கடந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE