பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 45 பேர் பாதிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 45 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 624 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச.19) தெரிவித்திருப்பதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 3,126 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 20, காரைக்கால் - 7, மாஹே - 18 என மொத்தம் 45 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், முதலியார்பேட்டையைச் சேர்ந்த 73 வயது முதியவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 624 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 715 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 201 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 138 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 339 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 752 (97.45 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரத்து 501 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 8,468 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT