அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், புதுப்பை, அரவக்குறிச்சி கிராம கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் முக்கியத் துணை ஆறுகளில் ஒன்று அமராவதி. பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் அமராவதி ஆறு உற்பத்தியாகிறது. திருப்பூர், உடுமலை, தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் பகுதிகளில் உள்ள கிராமங்கள் அமராவதி ஆற்றால் வளம் பெறுகின்றன.
அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீரைத் தேக்க, திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை அமைக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், அமராவதி அணையை ஒட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது. இதனால் அமராவதி அணையில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கன அடி நீர் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பாலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆற்று நீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.
இதனால் புதுப்பை, அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.