புதுச்சேரியில் 4.25 லட்சம் கரோனா பரிசோதனை; புதிதாக 30 பேர் பாதிப்பு: உயிரிழப்பு இல்லை

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 30 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை 4.25 லட்சம் பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச.9) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 3,153 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-11, காரைக்கால்-9, மாஹே-10 என மொத்தம் 30 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

மேலும், உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 615 ஆகவும், இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 339 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 208 பேரும், வீட்டுத் தனிமையில் 162 பேரும் என மொத்தம் 370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 46 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 354 (97.36 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரத்து 700 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 43 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE