குமரியில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி ரூ.268 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்: 2,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி நாகர்கோவிலில் இன்று ரூ.268 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். மேலும் 2,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள வந்தார். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பகல் 2.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

இதில் நகராட்சி நிர்வாகம், மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத்துறை, சிறுதுறைமுகங்கள் துறை, மக்கள் நல்வாழ்வுதுறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காவல்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை, பள்ளிகல்வித்துறை, சமூகநலத்துறை, கூட்டுறவுத்துறை, நிலஅளவைத்துறை ஆகியவை சார்பில் ரூ.153.92 கோடி மதிப்பில் 21 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்த வைத்தார்.

மேலும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்தறை, நகராட்சி நிர்வாகம், மற்றும் குடிநீர் வழங்கல்துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் சாரபில் ரூ.60.44 கோடி மதிப்பில் 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்சபில் ரூ.54.22 கோடி மதிப்பில் 2,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதைத்தொடர்ந்து கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE