ஜெயலலிதா வருமான வரிபாக்கி: அரசுப்பணத்தில் செலுத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு   

By செய்திப்பிரிவு

வேதா இல்லத்தை அரசுடமையாக்கிய பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வரி பாக்கியான 36 கோடி ரூபாயை தமிழக அரசு செலுத்துவதை எதிர்த்து ஆம் அத்மி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த 2017-ம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்காக ஜெயலலிதாவின் வருமான மற்றும் சொத்து வரி நிலுவை தொகை உட்பட 69 கோடி ரூபாயை வைப்பு தொகையாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது.

இந்த தொகையில் இருந்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36 கோடியே 87 லட்ச ரூபாயை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதிக்க கோரி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “ ஏற்கனவே ஜெயலலிதாவிற்காக 50.80 கோடி ரூபாய் செலவில் அரசு நினைவிடம் கட்டி வருகிறது, கரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு மக்கள் வரி பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காக செலவிடுவது தவறு ”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வேதா நிலையத்தை அரசுடைமையாக்குவதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கோடு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கும்படி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் முறையிடும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE