செப்.14-ல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: கலைவாணர் அரங்கில் நடக்கிறது

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அரசு கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும், கரோனாவின் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை.

கரோனா தாக்கம் அதிகரித்துள்ள மாநிலங்களில் 3-ம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீத உறுப்பினர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் உயிரிழந்தார். 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் கட்டாயம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவைக் கட்டிடம் பழமையான ஒன்று. உறுப்பினர்கள் போதிய இடைவெளியுடன் அமர முடியாத வகையில் உள்ளது.

இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தை எங்கு நடத்துவது என சபாநாயகர் தனபால் புதிதாகக் கட்டப்பட்ட கலைவாணர் அரங்கில் நடத்தலாமா என ஆய்வு செய்தார். அதுகுறித்து பின்னர் அறிவிப்பதாக சபாநாயகர் ஆய்வுக்குப் பின் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றால் அங்கு 234 உறுப்பினர்கள் அமர்வது மட்டுமல்ல 256 துறைகளின் செயலர்கள், அதன் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கில் பலர் இயங்க வேண்டும். கோப்புகளை எடுத்து வரவேண்டும், பத்திரிகையாளர்கள், உயர் அதிகாரிகள், காவலர்கள் என நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் குவியும் நிலை ஏற்படும். வாகனங்கள் நிறுத்த இடம் வேண்டும்.

இதுபோன்ற பல பிரச்சினைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் அமரும் வசதி கலைவாணர் அரங்கில் உள்ளதால் அங்கு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தும் தேதியைச் சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

வரும் செப்.14-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அன்று காலை அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் நடத்துவது, ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்குவது உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்வார்கள்.

இதுகுறித்த சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவிப்பு:

“தமிழக ஆளுநர், இந்திய அரசியலமைப்புப் பிரிவு 174 ( 1) கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை 2020-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14-ம் நாள் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் கூட்டி இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இம்முறை 4 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் என்று கூறப்படுகிறது. கரோனா தொற்றுப் பரவல் பிரச்சினை உள்ளதால், கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் அரங்கிலும் ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கும் எனத் தெரிகிறது.

இக்கூட்டத்தொடரில் கரோனா சிகிச்சை, ஊரடங்கு நிலை, டெண்டர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எதிர்க்கட்சிகள் கிளப்பலாம். தமிழக அரசு சில சட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றவும், நிதி கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கையும் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 secs ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்