ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதிச் சடங்குகள் 
தமிழகம்

உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு சடங்குகள் செய்து புதைப்பு: மக்கள் அஞ்சலி

கி.பார்த்திபன்

ராசிபுரம் அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மனிதர்களைப் போல் அதன் உரிமையாளர் சடங்குகள் செய்து அடக்கம் செய்தார்.

ராசிபுரம் வி.நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் மணி. ஜல்லிக்கட்டுக் போட்டியில் ஆர்வம் கொண்ட மணி, தனது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ஐல்லிகட்டுக் காளை ஒன்றை வளர்த்து வந்தார். காளையை ஜல்லிக்கட்டு விழாக்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். காளையும் ஏராளமான பரிசுகளை வென்று கொடுத்துள்ளது.

இதனால், காளையை தனது சொந்த பிள்ளை போல் மணி வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காளை இன்று (ஆக.30) காலை 6 மணிக்கு இறந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மணி, மனிதர்களுக்கு செய்யும் சடங்கைப் போல் காளைக்கு தேங்காய், பழம், வைத்து மாலை அணிவித்து விளக்கேற்றி அனைத்து சடங்குகளையும் செய்தார்.

இதில் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு காளையை வணங்கிச் சென்றனர். பின், ஜேசிபி உதவியுடன் காளையை தூக்கிச் சென்று கோனேரிப்பட்டி மயனாத்தில் புதைத்தனர். ஜல்லிக்கட்டு காளை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT