திருக்கோயிலுக்குள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவதற்குத் தடை உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று அருள்மிகு முக்குருணி விநாயகர் பூஜை நிகழ்ச்சிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது கோயில் நிர்வாகம்.
கரோனா பரவல் காரணமாக ஆலய வழிபாடுகளுக்கு தமிழகம் முழுவதும் தடை நீடிக்கிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் அருள்மிகு முக்குருணி விநாயகர் பூஜைகள் நடைபெற்றன. இதில் 18 படி அரிசியில் பெரிய கொழுக்கட்டை படைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
இப்பூஜையை இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான http://tnhrce.gov.in/ மற்றும் திருக்கோயில் இணையதளமான www.maduraimeenakshi.org இணையதளங்களில் பக்தர்கள் காணலாம். மேலும், maduraimeenakshi youtube சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.