10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி  

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி (கல்வி) துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெற இருந்தது. இத்தேர்வை 9,39,829 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனர். இதற்கிடையே கரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் பதிவு செய்திருந்த 9,39,829 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

இதுகுறித்த சென்னை மாநகராட்சி துணை இயக்குனர் (கல்வி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள் என 70 பள்ளிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 2019/20 ஆம் கல்வியாண்டில் அரசு 10 ஆம் வகுப்புத் தேர்வில் 5,988 மாணவ/மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100% ஆகும்.

2019-20 ஆம் கல்வி ஆண்டில் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 35 பேர். 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 170 பேர். 350க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் 493 பேர்.

2019-20 ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் ஆணையர் கோ.பிரகாஷ், தெரிவித்தார்”.

இவ்வாறு இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவத், தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE