முழு ஊரடங்கு நாளில் ஓட்டுநர்களுக்கும், ஆதரவற்றோருக்கும் அம்மா உணவகங்கள் பெரிய அளவில் கைகொடுக்கின்றன.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் மட்டும் செயல்படுகின்றன.
இந்நிலையில் ஏழை எளியோரின் பசியாற்றும் இடங்களாக திகழும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல நேற்று செயல்பட்டன. இங்கு குறைவானகட்டணத்தில் உணவு கிடைப்பதால்காலை உணவுக்கு வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 11 அம்மா உணவகங்களில் காலை, மதியம் உணவு விற்பனை செய்யப்படுகிறது.
வெளியூர்களில் இருந்து வந்துசென்னையில் சாலையோரங்களில் கடை வைத்திருக்கும் பலருக்கு குடும்பம் இல்லாததால்வீட்டில் சமைப்பதில்லை. ஊரடங்கு போன்ற காலங்களில் அனைத்து உணவகங்களும் முடப்பட்டு இருப்பதால் தங்களுக்கு அம்மா உணவகங்கள் பெரிய அளவில் கைக்கொடுக்கின்றன என்கிறார்கள்.
முன்பு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலங்களில் தமிழக அரசு, அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கியது. தற்போதைய ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிலும் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.