சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: தாய், மகன், மகள் காயம்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டு தாய், மகன், மகள் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

வெம்பக்கோட்டை அருகே உள்ள வெற்றிலையூரணியைச் சேர்ந்தவர் சரவணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.

அதையடுத்து, இவரது மனைவி ஜெயராணி (35), அவரது குழந்தைகள் சங்கரி (16), விக்னேஷ்வரன் (10) ஆகியோருடன் தனது அண்ணன் மகேஷ்வரன் வீட்டில் வசித்து வந்தார். கணவரை இழந்ததால் வருமானம் ஈட்டும் நோக்கில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளார்.

வழக்கம்போல் வீட்டின் அருகே இன்று சோல்சா வெடிகள் தயாரித்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், பட்டாசு தயாரித்த ஜெயராணி, அருகிலிருந்த அவரது மகள் சங்கரி, மகன் விக்னேஷ்வரன் ஆகியோரும் பலத்த தீக்காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் வீட்டில் தீ பரவாமல் தடுத்து காயமடைந்த மூவரையும் மீட்டனர். அவர்கள் 3 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE