சென்னையிலிருந்து கரூர் திரும்பிய ஹோட்டல் தொழிலாளி கரோனாவால் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னையிலிருந்து கரூர் திரும்பிய ஹோட்டல் தொழிலாளி கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்த 40 வயது நபர் ஹோட்டல் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக தனி காரில் மனைவி மற்றும் மகளை கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர் தனி காரில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து கரூர் வந்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்குக் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியான நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவரது உடல் அரசு விதிமுறைகளின்படி உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தற்போது திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் உள்ளனர். அவர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சேர்க்கப்பட்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த 96 வயது முதியவர் ஏப்ரல் 14-ம் தேதி உயிரிழந்த நிலையில், சென்னையிலிருந்து வந்த கரூரைச் சேர்ந்தவர் 2-வது நபராக கரூர் மருத்துவமனையில் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE