தேனி மாவட்டத்தில் மொத்தம் 43 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 35 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக புதிதாக கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு தேனி மாவட்டம் மாற்றப்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள 35 பேரையும் தொடர்ந்து தனிமையில் இருக்கும்படி கூறி, கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு முறையே 14, 18, 21-வது நாட்களில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். அதில் கரோனா தொற்று இல்லை என்றால்தான் அவர்கள் முழுமையாக குணமடைந்ததாகக் கருதப்படுவர். மேலும் அதுவரை புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாவிட்டால்தான் தேனி மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து மாற்றப்படும் என்று கூறினர்.