குடும்ப அட்டை இல்லாத 4,022 திருநங்கைகளுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர்சமையல் எண்ணெய் கொண்ட தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அதேநேரம், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல சீரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு நலத்திட்டங்கள்
குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ,டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவியும், அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு தலா 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் குடும்ப அட்டை இல்லாத 4,022 திருநங்கைகள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.