பிஹாரில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்த மதுரை பெண் நீதிபதி: கரோனா ஊரடங்கில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் அளித்த மனிதநேயம்

ஊரடங்கு உத்தரவால் காசியில் தவித்த மதுரையைச் சேர்ந்த முதியவர்கள் 22 பேர் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்த முதியவர்கள் 22 பேர் காசிக்கு புனித யாத்திரை சென்றனர். இவர்கள் புனித யாத்திரையை முடித்து கயாவில் இருந்து மதுரைக்கு திரும்ப தயாரான நிலையில் கரோனா பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

போக்குவரத்து முடக்கப்பட்டதால் 22 பேரும் மதுரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் உணவு, மருந்து, தங்குமிடம் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இவர்கள் கயாவில் உதவிகள் கிடைக்காமல் சிரமப்படுவதை வழக்கறிஞர் கு.சாமிதுரை, மதுரை மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி வி.தீபாவின் கவனத்துக்கு கொண்டுச்சென்றார். அவர் காயாவில் இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி விவேக்பரத்வாஜிடம் போனில் தெரிவித்து 22 பேருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து கயா சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் விரைந்து செயல்பட்டு 22 பேரையும் மீட்பு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உணவு வழங்கினர். மருத்துவ பரிசோதனையில் 22 பேருக்கு கரோனா தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது.

இது குறித்து நீதிபதி தீபா கூறுகையில், தற்போது வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் 22 பேரும் மதுரைக்கு அழைத்து வரப்படுவார்கள். மதுரையைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களில் உதவிகள் கிடைக்காமல் தவிப்பது தொடர்பாக தகவல் கிடைத்தால் அந்தந்த பகுதி சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE