விஜயகாந்த் உடன் உரையாட வாரீர்: அழைக்கும் கேப்டன் ஆப்

விஜயகாந்த் உடன் நேரடியாகப் பேச வேண்டுமா? 'கேப்டனோடு உரையாடுங்கள்' என்னும் தேமுதிக கட்சியின் ஆண்ட்ராய்ட் மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

பிரதமர் மோடி துவக்கி வைத்த, 'சாமானிய மக்களுடன் சமூக ஊடகங்களில் தொடர்பு' தமிழகத்துக்கும் வந்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கேப்டன் ஆப் தொடங்கப்பட்டிருக்கிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு, புதிதாக வெளியிடப்பட்டுள்ள 'கேப்டன்' (CAPTAIN Vijayakanth) செயலி மூலம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலளிக்கிறார்.

கடந்த சில வருடங்களாக விஜயகாந்துக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் இந்த ஆண்ட்ராய்ட் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் நேரடிப்பார்வையின் கீழ், செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், பதிவிடும் கருத்துகளுக்கும் விஜயகாந்தே பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது.

"செயலியில் உள்நுழையும்போது, பயனாளிகள் தங்களின் பெயர், மொபைல் எண், இ-மெயில் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், விஜயகாந்த் அளிக்கும் பதில்கள் நேரடியாக அவர்களின் இன்பாக்ஸுக்குச் செல்லும்" என்கிறது இந்த செயலியைத் தயாரித்த பிக்ஸல் மேக்னஸ் நிறுவனம்.

இச்செயலி மூலம், தேமுதிக கட்சியின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், முடிவுகள், செயல்திட்டங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றின் உடனடித் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தனித்தனியே பொத்தான்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

2005-ம் ஆண்டு மதுரையில் தேமுதிக தொடங்கப்பட்ட தருணத்தில் இருந்து தற்போது எதிர்க்கட்சியாக இருப்பது வரை, அவற்றின் செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளது. 'அணி' என்ற தலைப்பின் கீழ் கட்சி நிர்வாகிகள் புகைப்படங்களுடன் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இளைஞர்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்படாமல், அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தும் வகையில் செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் இணைப்பும் தரப்பட்டிருக்கிறது.

கட்சியில் சேர்வதற்கு விருப்பம் கொண்டவர்களை இணைப்பதற்கும் இச்செயலியில் ஆப்ஷன் இருக்கிறது.

சமீப காலமாக சமூக ஊடகங்களில், விஜயகாந்துக்கு ஆதரவுக்குரல்கள் பெருகி வரும் நிலையில், எட்டு மாதங்களில் வரப்போகும் பொதுத்தேர்தலுக்கான ஆரம்பமாகவே கேப்டன் செயலி உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE