திருவண்ணாமலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களின் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசியை அதிமுகவினர் விநியோகம் செய்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 91,975 பதவிகளுக்கு, 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3,643 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 48,891 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. மேலும் 18,570 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 27-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், எஞ்சியுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் இன்று (டிச.30) நடைபெற்று வருகிறது. இந்த ஒன்றியங்களில் 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 46,639 பதவிகள் உள்ளன. இதில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட பதவிகள் போக, இதர பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகளில், 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக போளூர், கலசபாக்கம், செங்கம்,சேத்துப்பட்டு, புதுப்பாளையம், வந்தவாசி, ஜவ்வாதுமலை, ஆரணி மற்றும் மேற்கு ஆரணி உள்ளிட்ட 9 ஒன்றியங்களுக்கு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் மைத்துனர் தீபாசம்பத் சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கவுரி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தர்மன் ஆகிய மூன்று அதிமுக வேட்பாளர்களும் இணைந்து, வாக்களித்து விட்டு வரும் பொதுமக்களுக்கு ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசியை வழங்கி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் இச்சம்பவம் நடைபெற்று வரும் நிலையில், இதனால் சேவூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.