பண மதிப்பிழப்பின்போது அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடி கடன் கொடுத்த சசிகலா: வருமானவரி துறை விசாரணையில் தகவல்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை யின்போது செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த சசிகலா, அவற்றை மாற்றுவதற்காக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடி கடன் கொடுத்தது வருமானவரித் துறை விசாரணை யில் தெரியவந்துள்ளது.

கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அந்த நேரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த காலக்கட்டத்தில் சசிகலா, தன்னிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி சசிகலா தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் மட்டும் ரூ.1,674 கோடி மதிப்புள்ள சொத்துகளை சசிகலா வாங்கிக் குவித்தார் என்றும், 2016-ம் ஆண்டு நவம்பர் 8 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை இந்த பணப்பரிமாற்றம் நடந்துள்ள தாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சசிகலா எந்தெந்த சொத்துக் களை யாரிடம், எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்பதும்,இதில், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு கைமாறியது என்பதும் வருமான வரி சோத னையில் கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவின் நெருங்கிய உறவினர்ஒருவர் மூலம் பல்வேறு பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சொத்துக்கள் வாங்கியது தவிர, வேறு விதமாகவும் செல்லாத பணத்தை புதிய நோட்டாக மாற்ற சசிகலா ஏற்பாடு செய்ததாகவும், இந்தப் பணத்தை வைத்து பலருக்கு நிதி கொடுத்து அதிலிருந்து வட்டி பெறும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

6 சதவீத வட்டி

அரசு கட்டிட ஒப்பந்ததாரர்கள் தங்கள் தொழிலுக்கு முன்பணமாக கடன் பெறுவது உண்டு. இதைப் பயன்படுத்திக் கொண்ட சசிகலா, அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடிக்கு பழைய நோட்டுகளை கடனாக கொடுத்துள்ளார்.

அரசு கட்டிடங்கள், அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு டெண்டர்களை எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.240 கோடி கடனாக கொடுக்கபேரம் பேசப்பட்டு, அதில் ரூ.237 கோடி ரூபாய் செல்லாத ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப் பட்டுள்ளன. இந்த பணத்துக்கு ரூ.7.5 கோடி கமிஷனும் பெறப்பட்டுள்ளது. பணத்தை ஓராண்டு காலத்துக்குள் திருப்பித் தர வேண்டும். தாமதமானால் 6 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்தப் பணம், ஒப்பந்ததாரர்கள் மூலம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு சசிகலா பினாமிகள் மூலம் புதிய பணமாக மாற்றப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி ரூ.101 கோடியும், டிசம்பர் 30-ம் தேதி ரூ.136 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும்வருமானவரித் துறை விசா ரணையில் தெரியவந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE