சூரிய கிரகணத்தை முன்னிட்டு பழநியிலுள்ள கோயில்களில் நடை சாத்தப்படவுள்ளதால், பக்தர்கள் நாளை காலை கோயில்களுக்கு வருவதை தவிர்க்க கோயில்நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை காலையில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நாளை காலை 6.15 மணி முதல் பகல் 11.30 மணிவரை நடைசாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மலைக்கோயிலில் நாளை அதிகாலை 4 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் விஸ்வரூபதரிசனம், தனுர்மாதபூஜை, காலசந்திபூஜைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும்.
பகல் 11.20 மணிக்கு சூரியகிரகணம் முடிந்தபிறகு சம்ப்ரோச்சனம் செய்யப்பட்டு உச்சிகாலை பூஜை நடத்தப்படும். இதன்பிறகே பக்தர்கள் சுவாமிதரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
எனவே பக்தர்கள் டிசம்பர் 26 ம் தேதி நாளை காலையில் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு பழநி கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.