எம்ஜிஆரின் ரசிகர், கடந்த பல ஆண்டுகளாக அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் வீட்டு வாசலில் எம்ஜிஆர் உருவத்தைக் கோலமாக வரைந்து அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நடிப்புத் திறன், மக்கள் சேவை, அரசியல் ஆகியவற்றில் ஈர்க்கப்பட்ட அபிஷேகப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் எம்ஜிஆரின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய தினங்களில் அவரது வீட்டு வாசலில் எம்ஜிஆரின் உருவத்தைக் கோலமாக வரைந்து வருகிறார்.
இந்நிலையில், எம்ஜிஆரின் நினைவு தினமான இன்று (டிச.24) அபிஷேகப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டு வாசலில் குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் எம்ஜிஆரின் 3 உருவங்களைக் கோலமாக வரைந்தார். இது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எம்ஜிஆர் மீது கொண்ட பக்தி, பாசம் காரணமாக ஆண்டுதோறும் தலைவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அவரது உருவத்தை வரைகிறேன். அனைவரும் எம்ஜிஆரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவரின் உருவப்படத்தைக் கோலமாக வீட்டு வாசலில் வரைந்து வருகிறேன்" எனத் தெரிவித்தார்.