உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போது உள்ளாட்சித் தேர்தல்நடைபெறாத சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு 2019-20 கல்வியாண்டில் முதல்கட்டமாக இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்து, 9 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வி.எம்.ராஜலட்சுமி, கே.பாண்டியராஜன், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலர் கே.சண்முகம், செயலர்கள் ஒட்டம் டாய் (ஆதிதிராவிடர்) பிரதீப்யாதவ் (பள்ளிக்கல்வி), ஆ.கார்த்திக் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), எஸ்.சுரேஷ்குமார் (சிறுபான்மை நலத்துறை இயக்குநர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2 மாணவர்கள் என 5 லட்சத்து 28 ஆயிரத்து 769 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் மட்டும் 1 லட்சத்து 37 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தற்போது இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.