தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்து வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்கள், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம் தங்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.
1989 மற்றும் 1990-ம் ஆண்டு களில் இலங்கையில் நிகழ்ந்த போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந் தனர். அவ்வாறு தஞ்சமடைந்த மக் களை தமிழக அரசு, மறுவாழ்வு முகாம் அமைத்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி களை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும், சுமார் 80 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 5 முகாம் களில் சுமார் 1,650 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
விருத்தாசலம் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்களிடம் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து கேட்டபோது, "சட்டத் திருத்தம் குறித்து முழுமையாக தெரியாது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு இங்கு (இந்தியாவில்) குடியுரிமை கிடையாது என்ற தகவல்கள் எங்களுக்கு மேலும் மனச்சோர்வை அளிக்கிறது'' என்கின்றனர்.
அகதிகள் முகாமின் தலைவர் கந்தசாமியிடம் கேட்டபோது, "நாங்கள் இங்கு வந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரையிலும் திறந்தவெளி சிறைவாசம்தான். குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளனர். ஆனால் குடி யுரிமை மட்டும் மறுக்கப்படுகிறது. குடியுரிமை இல்லாததால், வெளி யூருக்கு செல்ல வேண்டுமென் றால்கூட, வட்டாட்சியர், காவல் துறை என அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
2 மாதங்களுக்கு முன்புகூட கடலூர் ஆட்சியரை சந்தித்து இந்திய குடியுரிமை கோரி மனு அளித்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என கைவிரித்து விட்டார். தமிழகமும் எங்களை புறக்கணித்தால் நாங்கள் எங்கே செல்வோம்'' என்றார் கவலையாக.
இந்த முகாமைச் சேர்ந்த ஆசிரியை லதா கூறும்போது, "12 வயதில் இங்கு வந்தேன். எனக்குத் திருமணமாகி, என் பிள்ளைகள் கல்லூரியில் படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இன்றைய சூழலில் என் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் இலங்கை செல்ல முடியுமா? அவர்கள்தான் வருவார்களா? இங்கேயே பிறந்து, வளர்ந்து படித்து வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டனர்.
எங்கள் எதிர்காலம் தமிழகம் தான். எனவே எங்களுக்கு இந்தியக் குடியுரிமை அளித்து அரசு வேலைவாய்ப்பில் எங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்'' என்றார்.
அதேபகுதியில் வசிக்கும் சித்ரா என்பவர் கூறும்போது, ‘‘இந்திய மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு அண்டை நாட்டில் எப்படி குடியுரிமை கேட்க முடியும்? நாங்கள்தான் இலங்கையில் பிறந்து இங்கு வந்ததால் திறந்தவெளி சிறைவாசம் அனுபவிக்கிறோம். இங்கே பிறந்த இந்த இளம் தளிர்கள் என்ன தவறு செய்தார்கள்? அரசு இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?'' என்றார் ஆதங்க மாக.
‘குடியுரிமை மட்டுமே தீர்வு' எனக் கூறும் அகதிகள் முகாம் தமிழர்கள், தங்களது கோரிக் கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்; அதற்கு தமிழக அரசு பக்கத் துணையாக இருக்க வேண்டும் என்கின்றனர்.