இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு: எச்ஐவியால் பாதித்தவர்களை அரவணைப்போம்; பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

எய்ட்ஸ் தொற்று உள்ளோரை பரிவுடன் அரவணைத்து சம உரிமை அளித்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவ வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எய்ட்ஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி (இன்று) உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை யொட்டி, முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறி யிருப்பதாவது:

‘சமூக பங்களிப்பு மூலம் எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தை ஏற்படுத்துதல்’ என்பதே இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து. எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் செயல்படும் தமிழக அரசு, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய ரூ.10 கோடி வைப்பு நிதியுடன் செயல்படும் தமிழக அரசின் அறக்கட்டளைக்கு இந்த நிதியாண்டில் கூடுதல் வைப்பு நிதியாக ரூ.5 கோடி வழங்கியுள்ளது.

அந்த நிதியில் இருந்து வரும் வட்டியின் மூலம் 1,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு, கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.

மேலும், எச்ஐவியால் பாதிக்கப் பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல் போன்ற நலத்திட்டங்களையும் அரசு சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத் துவதில் தனி கவனம் செலுத்தப் பட்டு, 29 மாவட்டங்களில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகுகள் மூலம் எய்ட்ஸ் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், எச்ஐவி தொற்றைக் கண்டறிய 2,883 நம்பிக்கை மையங்கள், 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அத்துடன் 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்கள் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் எச்ஐவியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வட்டார அளவில் 55 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், 174 இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன.

எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, கருவுற்ற பெண்கள் அனைவருக்கும் மாவட்டம்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம், கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் சிறப்பு மருத்துவ சிகிச்சை, அளிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு எய்ட்ஸ், பால்வினை தொற்று சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதி ஏற்று, எய்ட்ஸ் நோயை தடுக்க தன்னார்வ ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். எய்ட்ஸ் தொற்று உள்ளோரை பரிவுடன் அரவணைத்து சம உரிமை அளித்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவ வேண்டும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE