கோயில்களில் பக்தர்களுக்கு தரமான பிரசாதம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் ஓட்டலில், கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுடன் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத் தில், அன்னதானம், பிரசாதங் களைத் தயாரிப்பது, கையாள்வது, தயாரித்த உணவுகளை பாது காப்பாக வைப்பது உள்ளிட்டவை குறித்து கோயில் ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
கோயில்களில் பிரசாதம் மற்றும் உணவு பொருட்கள் தயார் செய்யும்போது, உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளின் அடிப்படையில் மூலப் பொருட்களை வாங்க வேண்டும். அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை சரி பார்க்க வேண்டும்.
குடிக்கத் தகுந்த தண்ணீரில் மட்டுமே உணவு தயாரிக்க வேண்டும். உணவு தயார் செய்த பிறகு, அவற்றை மூடி பாதுகாக்க வேண்டும். மொத்தத்தில், பக்தர்களுக்கு தரமான பிரசாதம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சான்றிதழ் கட்டாயம்..
உணவுப் பொருட்களைக் கையாள்வதால் கோயில்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் கட்டாயம் வாங்க வேண்டும். எனவே, விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து அவற்றில் ஏதாவது ஒன்றைப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.