சென்னை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''தமிழகக் கடல் பகுதியில் மீனவர்களுக்கு எவ்விதமான எச்சரிக்கையும் இல்லை. ஆனால் புல்புல் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் வங்க தேசத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் சங்கராபுரம் பகுதியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டம், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.