சென்னை
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் வரும் நாட்களில் 13 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி:
''தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வரும் நான்கு நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். இதன் காரணமாக வரும் நாட்களில் தென் தமிழகம், புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மழை அளவாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலுக்குள் சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதன் காரணமாக மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழகக் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது”.
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.