ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில்  மெட்ரோ ரயில் கட்டணம் 50 சதவீதம் குறைக்க ஆலோசனை

சென்னை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளை ஈர்க்கும் வகையில் ஷேர் ஆட்டோ, டாக்சிகள் இயக்கப்படுவதோடு, கலை மற்றும் கண்காட்சிகள், உணவு திருவிழாக்கள், மருத்துவ முகாம்களும் அவ்வப்போது நடத் தப்பட்டு வருகின்றன. இதனால் அலுவலக நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில்களில் தினமும் 1 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ஆனால், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூட்டம் குறைவாக உள்ளது.

எனவே, பயணிகளை ஈர்க்கவும், கட்டணச் சலுகை அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டத்தை நிர்வாகம் சமீபத்தில் நடத்தியது. அதில், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணத்தை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கட்டணம் குறைப்பது குறித்து ரயில்வே வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதால் வாரியத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் சேவை தொடங்கியவுடன் சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில் போக்கு வரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்ட ணம் அதிகமாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய மக்கள் தயக்கம் காட்டுகின் றனர். கட்டண குறைப்பு தொடர் பாக நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது வரவேற்கத் தக்கது. இதனால், அண்ணாசாலை யில் 40 சதவீதம் வரையில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE