வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.135 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தீனதயாள் மருத்துவக் கல்லூரி தலைவர் டி.டி.நாயுடுவை மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத் தணி அருகே தீனதயாள் மருத் துவக் கல்லூரி மற்றும் கல்வி அறக்கட்டளை உள்ளது. இதன் தலைவராக டி.டி.நாயுடு உள்ளார். இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல் மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்த்ததாக இக்கல்லூரி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் டி.டி.நாயுடு மீது மத்திய அமலாக்கப் பிரிவு அதி காரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கிகளில் அவர் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சட்டவிரோத பண பரிவர்த் தனை தொடர்பாக டி.டி.நாயுடுவிடம் விசாரித்தோம். போலி ஆவணங்களைக் காட்டி ஆந்திரா வங்கியில் ரூ.69 கோடியும், இந்தியன் யூனியன் வங்கியில் ரூ.66 கோடியும் அவர் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. தனது பெயரிலும் மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரிலும் மோசடி செய்துள்ளார்.
இதையடுத்து, டி.டி.நாயுடுவை கைது செய்துள்ளோம். நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.