சென்னை
வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, ''செப்டம்பர் 9-ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது வெப்பச் சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு வேளைகளில் சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்தப் போக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும். அதேபோல தென்மேற்குப் பருவமழை படிப்படியாகக் குறையும்.
இதன் காரணமாக மும்பை, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நாளை மறுநாள்முதல் மழை குறையத் தொடங்கும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரியில் கூடலூர் பஜாரில் 15 செ.மீ. மழையும் நடுவட்டத்தில் 11 செ.மீ. மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக் கல்லாறில் 9 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக சென்னையில் பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. மாலை மற்றும் இரவு வேளைகளில் சிறிது நேரம் மழை பெய்து வருகிறது. கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல மும்பை மாநிலமும் கனமழையால் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.