சென்னை
தமிழிசை தமிழக ஆளுநராகி இருந்தால் அதிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற சிறப்பும் தமிழிசைக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தனது பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை. ஆளுநர் தமிழிசைக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணாநகரில் தமிழ்ப் பெயர்கள் நூல் அறிமுக விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழிசை சவுந்தரராஜனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் களத்தில் அவர் அடுத்தடுத்து உயரிய பதவிகளைப் பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும்'' என்று தெரிவித்தார்