நேற்றும் அவலாஞ்சியில் உச்சகட்டமாக 91 செ.மீ மழை: தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

தென்மேற்குப் பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் நேற்று அதிகபட்சமாக 91 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதே நிலை தொடர்வதால் நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி அவலாஞ்சியில் 91 செ.மீ, அப்பர் பவானியில் 45 செ.மீ, எமரால்ட் 36 செ.மீ, சோலையாறு 28 செ.மீ , தேவாலா 26 செ.மீ, ஆழியார் 18 செ.மீ என பல இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்குப் பருவக்காற்று வலுவான நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோதி வீசக்கூடிய நிலை தொடர்கிறது.

இதன்காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் மலைப்பகுதிகள் அடங்கிய மாவட்டங்களான நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுவை, இதர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழையும், மேல்பவானியில் 45 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைப் பகுதிகளில் கடற்கரைக் காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதியில் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் ஜனவரி 1 முதல் இன்றுவரை காலகட்டத்தில் பதிவான மழை அளவு 12 செ.மீ. இந்தக் காலகட்டத்தின் இயல்பான அளவு 15 செ.மீ. வழக்கமான அளவை விட 18 சதவீதம் குறைவு. இது தமிழக அளவில், அதிகப்பட்சமாக தேனி மாவட்டத்தில் 68 சதவீதம் இயல்பைவிட அதிகம்.

நெல்லையில் 64 சதவீதம், திருப்பூரில் 97 சதவீதம் இயல்பை விட அதிகம். திருப்பூரில் பெய்த அளவு 102 மி.மீ, இயல்பு அளவு 52 மி.மீ, நீலகிரியில் இயல்பைவிட 14 சதவீதம் அதிகம். பெய்த அளவு 632 மி.மீ, இயல்பு அளவு 552 மி.மீ.

நீலகிரி அவலாஞ்சியில் அதிக அளவு மழை பெய்யக்காரணம், பொதுவாக தென்மேற்குப் பருவமழை காலத்தில், ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்குப் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைமீது மோதி மேலே செல்லும். இதன் காரணமாக மழை அதிகம் இருக்கும். மழைப்பகுதிகளில் இது வழக்கமாக நடக்கும். மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும், ஆனால் இந்தமுறை அதிகம்”.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE