சரிந்தது ஜல்லிக்கட்டு காளைகளின் மதிப்பு: எடைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யும் கொடுமை

By அ.வேலுச்சாமி

உச்ச நீதிமன்றத் தடையால் ஜல்லிக்கட்டு காளைகளின் மதிப்பு பல மடங்கு சரிந்துவிட்டது. திறமைக்கேற்ப விலை நிர்ணயித்த நிலை மாறி, மாட்டுச் சந்தைகளில் எடைக்கேற்ப விலை நிர்ணயம் செய்யும் கொடுமை தற்போது அரங்கேறி வருகிறது.

தனி கவனிப்பு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தென் மாவட்டங்களில் பெரும் வரவேற்பு உண்டு. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதை கவுரவம் என நினைப்பதால் பெரும்பாலான வீடுகளின் கட்டுத்தரைகளில் (மாடு கட்டுமிடம்) குறைந்தபட்சம் ஒன்றுக்கும் மேற்பட்ட காளைகள் நிற்கும். வீடுகளில் பசு, எருமை, உழவு மாடு போன்றவற்றைக் காட்டிலும் ஜல்லிக்கட்டு காளை களுக்கான கவனிப்பே தனி.

புல், வைக்கோல் போன்ற வற்றுடன் புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, சத்துமாவு கலந்து நீர், காய்கறிகள் போன்ற வகைவகை யான உணவுகள் வழங்குவர். இதுதவிர நீச்சல், ஓட்டம், பாய்ச்சல், உதைத்தல் போன்ற பலவகை பயிற்சிகளையும் அளிப்பர். இந்த காளைகள் ஜல்லிக் கட்டுகளின்போது தன்னை அடக்கு வருபவர்களை, தொடவிடாமல் எந்தளவுக்கு சுற்றிச்சுற்றி பாய்கிறதோ அதற்கேற்ப அதன் மதிப்பும், விலையும் உயர்ந்து கொண்டே இருக்கும்.

கார் விலையைவிட அதிகம்

வேகமாக ஓடாமல் மைதானத்தில் நின்று விளையாடக் கூடிய காளை என்றால் அதன்விலை குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரமாக இருக்கும். புகழ்பெற்ற காளைகளின் மதிப்பு, ரூ.1.5 லட்சத்தைத் தாண்டும். அதாவது நானோ கார் விலையைவிட அதிகம். இதுபோன்ற காளைகள் மதுரை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் பலரால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், காளைகளின் மவுசு பெருமளவில் குறைந்து வருகிறது. பழைய விலைக்கு யாரும் வாங்கப்போவதில்லை. அதேபோல், இவற்றை இனிமேல் பழக்கப்படுத்தி உழவுத் தொழிலுக்கு ஈடுபடுத்துவது எளிதான காரியமல்ல. எனவே வீட்டில் வெட்டியாக கட்டி வைத்திருப்பதைவிட, வந்த விலைக்கு விற்பனை செய்துவிடலாம் என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் மாட்டுச் சந்தைகளுக்கு சென்று ஜல்லிக்கட்டு காளை களை விற்பனை செய்யத் தொடங்கி விட்டனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற சந்தையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகள் மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளன.

நல்ல முடிவு எடுக்க வேண்டும்

இதுபற்றி தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க இணைச் செயலாளர் ராஜேஷ் கூறியது:

ஜல்லிக்கட்டு காளைகளின் மதிப்பு மைதானத்தில் விளையாடும் திறனைப் பொருத்தே இதுவரை கணக்கிடப்பட்டது. உச்ச நீதிமன்றத் தடையாலும், மேல்முறையீடு செய்யும் விஷயத்தில் தமிழக அரசு அமைதியாக இருப்பதாலும் இனிமேல் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. இதனால் பலர் தங்களது காளைகளைக் கிடைக்கும் விலைக்கு விற்கத் தொடங்கிவிட்டனர். சந்தைக்கு கொண்டு செல்லும்போது ரூ.1 லட்சம் மதிப்பிலான காளையைக்கூட, அதன் எடைக்கேற்பவே தரகர்கள் விலை நிர்ணயிப்பர். இதன்படி பார்த்தால் ஒரு காளை குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் முதல், அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் மட்டுமே விலை போகும். அத்துடன் வீட்டில் பிள்ளைபோல் வளர்த்த காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும்போது, பிள்ளைகளையே பறிகொடுப்பது போன்ற மனநிலை உருவாகும். இந்த நிலையைத் தவிர்க்கவும், ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறவும் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்