செம்மர கடத்தல் தொடர்பாக தான் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியதை தொடர்ந்து, நடிகர் சரவணன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
திருப்பதி வனப்பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செம்மரக் கடத்தல் தொடர்பாக ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்த சரவணன் உள்ளிட்ட சிலரை சித்தூர் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த நடிகர் சரவணன் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது: நான் நடிகராகவும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறேன். நேற்றைய தினம் நான் படப்பிடிப்பில் இருந்தேன். அந்த சமயத்தில் என்னை செம்மர கடத்தலில் சம்பந்தப்படுத்தி வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் சிலர் தகவல்களைப் பரப்பியுள்ளனர். அவ்வாறு பரப்பியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.