11 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது எல்காட்

By செய்திப்பிரிவு

தமிழக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 2014-15, 15-16-ம் கல்வியாண்டுகளில் 11 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் கணினித் திறன் மேம்பாட்டிற்காக அவர்களுக்கு, மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக சிறப்பு முயற்சிகள் துறையின் கீழ் வழங்கப்படும் இத்திட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் 21.65 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மேலும் 11 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்க ரூ. 1100 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.

தற்போதைய 2014-15-ம் கல்வியாண்டிற்கு 5.5 லட்சம், 2015-16ம் கல்வியாண்டிற்கு 5.5 லட்சம் என 11 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யும் பணியை வழக்கம் போல் எல்காட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த வகையில் 11 லட்சம் மடிக்கணினிகளை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை எல்காட் நிறுவனம் கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE