கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பலியானார்.
சென்னை கீழ்ப்பாக்கம் கெங்குரெட்டி சுரங்கபாதை அருகில் குடிசை மாற்று வாரியத்திற்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்த பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஒடிசாவை சேர்ந்த ஜெகன்னத் ஜின்னா (21), நசீர் (19), லங்கோ (29) ஆகியோர் ஈடுபட்டனர். தண்ணீர் தொட்டியின் உள்பகுதியில் இறங்கி வேலை செய்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் மின்சார வயர் இழுத்து விளக்கு போடப்பட்டது. மின்வயரை இழுத்து பணி செய்யும்போது ஜெகன்னாத் ஜின்னா மீது மின்சாரம் பாய்ந்து அலறினார். அவர் தண்ணீர் தொட்டி உள்ளேயே பலியானார்.
அவரை காப்பாற்ற சென்ற மற்ற இரு தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.