போக்குவரத்துத்துறை ஊழியர் கோரிக்கையை நிராகரிப்பதா? ராமதாஸ் கண்டனம்

போக்குவரத்து ஊழியர் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு, தொழிற்சங்கங்களின் கோரிக்கையான 50 சதவீத ஊதிய உயர்வை நிராகரித்துவிட்டது.

தன்னிச்சையாக முடிவெடுத்து 5.5 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கடைசியாக கடந்த 2010-ல் நடைபெற்ற 11-வது ஊதிய ஒப்பந்தத்தின்போது 14 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 2010- ஆண்டுக்கு பிறகு 60 சதவீதம் வரை விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியிருப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.

இதை பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட ஆட்கள் இல்லாத 25 சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் சித்திரை திருநாளில் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE