டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி டிஜிபி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தை ஆனந்துடன் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகி றார். கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைதானார்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முன்பு ஏப்ரல் 23-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நந்தினி அறிவித்திருந்தார்.
அதன்படி, உண்ணாவிரதம் இருப்பதற்காக தனது தந்தை ஆனந்தனுடன் நேற்று காலை சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே வந்துகொண்டிருந்தார்.
அவர்கள் இருவரையும் மெரினா காவல் நிலைய ஆய்வாளர் சிபுகுமார் மற்றும் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.