‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் டெல்லி பயணம்

‘நிதி ஆயோக்’ அமைப்பின் தனித் திறன் மேம்பாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக மாநில அரசுகளின் முதல்வர்களும் பங்குபெறும் வகையில் ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு சார்பில் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையில், டெல்லியில் இன்று தனித் திறன் மேம்பாடு குறித்த கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தைத் தொடக்கி வைக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை கூட்டம் முடிந்ததும் முதல்வர் சென்னை திரும்புவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE