வாகன சோதனையில் மோதல்: உதவி ஆய்வாளரின் பைக்கை எரித்த இளைஞர்கள் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் உதவி ஆய்வாளரின் பைக்கை எரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் வேணுகோபால் ஆகியோர் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பைக்கில் வந்த இளைஞர் ஒருவரை வழிறித்து சோதனை செய்தபோது, அந்த இளைஞருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீஸார் இளைஞரை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், சிறிது நேரம் கழித்து தனது நண்பர்களுடன் அதே பகுதிக்கு வந்து போக்குவரத்து போலீஸாரிடம் சண்டை போட்டுள்ளார்.

சண்டையின்போது அருகே நிறுத்தப் பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வேணுகோபாலின் பைக்குக்கு அவர்கள் தீவைத்துள்ளனர். போலீஸ்காரரின் பைக் தீப்பற்றி எரிவதை பார்த்து பொதுமக்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸார் அந்த பகுதிக்கு சென்று 5 இளைஞர்களை பிடித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த பிரபாகரன் (25), பஷீத் (25), பிரகாஷ் (25), மோகன் (24), சதீஷ்குமார் (24) என்பது தெரிந்தது.

ஐந்து பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் மீது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதியை கெடுத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE