நாளை அட்சய திருதியை: அதிகாலையிலேயே கடைகளை திறக்க நகை வியாபாரிகள் ஏற்பாடு

By செய்திப்பிரிவு

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள நகைக்கடைகளை நாளை காலை 6 மணிக்கு முன்பாகவே திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாளில் வரும் திருதியை தினம், அட்சய திருதியை ஆகும். இது, அதிர்ஷ்டம் தரும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதற்கான பலன் பல மடங்காக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல அட்சய திருதியை தினத்தில் தங்கம், வெள்ளி வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. இதனால், அன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. எனவே, இந்த நாளில் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

நாளை அட்சய திருதியை என்பதால், நகைக்கடைகளை காலை 6 மணிக்கு முன்பே திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகள் முதல் சிறிய நகைக் கடைகள் வரை இந்த முடிவை எடுத்துள்ளன.

இதுகுறித்து மெட்ராஸ் தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ‘‘அட்சய திருதியை அன்று கூட்டம் அதிகமாக வரும் என்பதால் நகை வியாபாரிகள் பெரும்பாலானோர் நாளை காலை 5.30 மணிக்கே கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர்.

நள்ளிரவு 1 மணி வரை கூட கடைகளை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக எடை குறைவாக உள்ள நகைகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கேரள டிசைன் செயின்கள், வளையல்கள் மற்றும் தங்கக் காசுகள் அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அட்சய திருதியையொட்டி, நகைக் கடைகள் அதிகம் உள்ள தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE