வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டதால் சமீபகாலமாக வறுமையில் தள்ளப்பட்டு மரம் வெட்டுதல் உள்ளிட்ட சமூக விரோத பாதைகளுக்கு செல்லும் பழங்குடியினரை மீட்க அவர்களின் பாரம்பரிய வன உரிமையான ‘சிறு வன மகசூல்’ முறையை அங்கீகரித்து அதை முறையான தொழிலாக மேம்படுத்த வேண்டும் என்று கானுயிர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன விலங்கு சரணாலயங்கள் அமைத்தல், வனங்களில் சுரங்கங்கள் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, வனங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதால் அவர்களின் பாரம்பரிய வன உரிமை பறிக்கப்படுகிறது. இதனால், வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் பழங்குடியினர், சர்வதேச வனப் பொருட்கள் கடத்தல் கும்பலின் இடைத்தரகர்களிடம் சிக்கி சமூக விரோதப் பாதைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதன் விளை வாகத்தான், ஜவ்வாதுமலைப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உத்தரா கண்ட், மேகாலயா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக சிறப்புத் திட்டங் களை செயல்படுத்தி வருகின்றன.
வனப் பொருட்கள் கடத்தலை கண்காணிக்கும் உலகளாவிய அமைப்பான ‘டிராஃபிக்’ உடன் இணைந்து சிரபுஞ்சி, அகும்பே உள் ளிட்ட பகுதிகளில் பழங்குடியினரின் பாரம்பரிய உரிமையான ‘சிறு வன மகசூல்’ திட்டத்தை வணிக ரீதியாக செயல்படுத்தி வருகின்றன.
இன்றைய பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ உலகில் தவிர்க்க முடியாத பொருட்களாக வனத்தில் இருக்கும் மூலிகைத் தாவரங்கள், மரங்களின் பட்டைகள், வேர்கள், மலர்கள், கனிகள், கொட்டைகள், கிழங்குகள் விளங்குகின்றன. குறிப் பாக, மழைக்காட்டுத் தாவரங்களில் ‘மெடபாலைட்’ என்ற உயிர் வளர்ச் சி க்குத் தேவையான வளர்சிதை மாற்ற பண்பு காரணிகள் இருக்கின்றன.
அதில் இருக்கும் ‘ஆல்கலாய்ட்’ என்ற வேதிப் பொருள் நச்சுத் தன்மையுடன் மருத்துவப் பண்பும் கொண்டது. அவை இயல்பாகவே நோய்க் கிருமிகளிடம் இருந்தும் பூச்சிகளின் தாக்குதல்களில் இருந் தும் தற்காத்துக் கொள்ளும் இயல் புடையவை. உலகெங்கும் இருக்கும் மருந்து நிறுவனங்களுக்கு மிக அத் தியாவசியமான பொருளாக இது விளங்குகிறது.
மேற்கண்ட தாவரங்களை அடையாளம் காண்பதில் பாரம்பரிய அறிவு பெற்றவர்கள் பழங்குடியினர் மட்டுமே. கர்நாடகத்தில் பழங்குடி யினர் சேகரிக்கும் பொருட்களை வனத்துறையே உரிய விலை கொடுத்து வாங்கி அதை சந்தைப் படுத்துகிறது. இதன்மூலம் கிடைக் கும் வருவாய், பழங்குடியினப் பெண் கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் வீணாகாமல் முறைப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தின் ஆனைமலை, ஜவ்வாதுமலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கல்வராயன் மலை உள்ளிட்ட காடு களில் மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்கள் அதிகம் இருக்கின்றன. இவற்றைக் கண்டறியும் பாரம்பரிய அறிவு கொண்ட பழங்குடியினர் கடந்த தலைமுறையுடன் அழியும் அபாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
அவர்கள் அழிந்து விட்டால் உயிர் காக்கும் மருத்துவ உலகத்துக்கு தேவையான அறிவு சார்ந்த சொத்து அவர்களுடன் அழிந்து விடும்.
எனவே, பழங்குடியினர் மூலம் ‘சிறு வன மகசூல்’ முறையில் வனத்தில் உள்ள மருத்துவப் பொருட்களை சேகரிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால், பழங்குடியினர் நிரந்தர வாழ்வாதாரம் பெறுவதுடன் பாதை மாறிச் செல்லும் நிலையும் ஏற்படாது என்கின்றனர் கானுயிர் ஆர்வலர்கள்.