போக்குவரத்து ஊழியர்களின் 12-வது ஊதிய உயர்வு தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் இன்று நடக்கவுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 12-வது புதிய ஊதியம் ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக இதுவரையில் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முதல் 4 கட்டங் களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு அமைத்த 14 பேர் கொண்ட குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதையடுத்து, 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் போக்குவரத் துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். போக்குவரத்து தொழிலாளர் களுக்கு பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை அகற்றுதல், 240 நாட்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்து ஒப்பந்த அடிப்படையில் ஊதிய வழங்குதல், விபத்தின் போது தொழிலாளர் களுக்கு மாற்றுப்பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப் பட்டுள்ளன. ஆனால், 12-வது ஊதிய ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையே, 6-ம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் தலைமையில் குரோம்பேட்டையில் இன்று நடக்கவுள்ளது. எனவே ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது இன்று இறுதி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏஐடியுசி பொதுச் செயலாளர் லட்சுமணனிடம் கேட்டபோது, ‘‘இதுவரையில் நடந்துள்ள பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளோம். அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்பதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த 54,000 பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள பிரச்சினை, சேமநல திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் இழுபறி நிலவுகிறது.
எனவே, இன்று நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் இந்த கோரிக் கைகள் குறித்து முக்கியமாக பேசப்படும்’’ என்றார்.