சுற்றுச்சூழல் மற்றும் மாசு தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்கான மாநில மேல்முறையீட்டு ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர் மாசு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்கான மாநில மேல்முறை யீட்டு ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியையும் அதன் உறுப்பினராக வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளை நியமிக்க வேண்டும் என்று கடந்த 1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, தமிழக மேல்முறையீட்டு ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி, கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஜனவரி 23-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.சுதந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.